திண்டுக்கல், செப். 30: அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காட்டாஸ்பத்திரி சாலையில் கல்லறைத்தோட்டம் அருகே நடந்த இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் செல்லையா தலைமை வகித்தார். இளைஞர் தொழிலாளர் நலன் பணி செயலாளர் பிலிப் சுதாகர், தமிழ்ப்பண்ணை அமைப்பு நிர்வாகி குழந்தை ஆகியோர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். அவர்களுக்கான மாத சம்பளத்தை அரசே வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.