கொழும்பு: நாட்டின் நிதி பாதுகாப்பிற்காக ரூ20,000 கோடி ஒதுக்கப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.1.80 லட்சம் கோடி தேவைப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 2 மாதங்களில் மக்களுக்கு 2 வேளை மட்டுமே உணவு கிடைக்கும் சூழல் ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் ஏற்கனவே கூறியிருந்தார்.இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு இல்லாததால், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து, மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமரும் நிதியமைச்சருமான ரணில், `நாட்டின் நிதி பாதுகாப்புக்காக ரூ20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுவதால் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 10 சதவீதம் மக்களுக்காவது 3 வேளை இலவசமாக உணவளிக்க முடியும்,’ என்று கூறினார். …