திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் சஞ்சீவ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி தொகைக்கான உத்தரவு நகல் வழங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏஏஒய் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.