ராமநாதபுரம், செப்.25: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் குறித்து அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு செய்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்து முடித்து, பயிற்சி மருத்துவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முன்பாக பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதுகுறித்து பயிற்சி மருத்துவர்கள் கூறும்போது, ரத்ததானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் மக்களிடையே இருக்கிறது.
சுதந்திர தினம், குடியரசு தினம் அரசு நிகழ்ச்சிகள், தன்னார்வலர்கள் நிகழ்ச்சிகள் மூலம் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு செய்து தற்போது மக்களிடையே ரத்ததானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனை விட மிக முக்கியமானது உடல் உறுப்பு தானம். இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதன் மூலம் தற்போது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் முன்னெடுத்து செய்து கொண்டிருக்கின்றோம். முதல் முயற்சியாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துவங்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தாலுகா தலைமை மருத்துவமனைகள் என நேரில் சென்று, அங்கு வரக்கூடிய மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.