உக்ரைன்: உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக உக்கிரமாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனிடையே ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் பலியானார். உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது. நவீன் சேகரப்பா உயிரிழந்ததை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கார்கிவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ரஷ்யா, உக்ரைன் தூதர்களிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. …