ஈரோடு, : ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தனியார் மருத்துவமனையில் கருமுட்டையை விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு கடந்த மாதம் புகார் சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஈரோடு தெற்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தனது கணவரை விட்டு பிரிந்து ஈரோட்டில் பெயின்டராக வேலை செய்யும் நபருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். தனது மகள் 12 வயதில் பூப்படைந்ததும், கருமுட்டை விற்பனை தொழிலில் இறங்கியிருக்கிறார். இதற்காக சிறுமியிடம் வளர்ப்பு தந்தை பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பாலியல் பலாத்காரம் செய்வதும் நடந்து வந்துள்ளது. இதன் மூலம் சிறுமிக்கு கருமுட்டை உருவானதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டையை விற்று வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதுபோன்று கருமுட்டை கொடுத்து பணம் பெற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் ரூ.20 ஆயிரம் வாங்கி வந்துள்ளனர். இதற்கு புரோக்கராக மாலதி (36) என்ற பெண் இருந்துள்ளார். மாலதி கமிஷனாக ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார். மருத்துவமனையில் கருமுட்டை கொடுத்து பணம் பெற வசதியாக சிறுமியின் உண்மையான வயதை மறைத்து போலியாக வயது 20 என்று ஆதார் அட்டை தயாரித்துள்ளனர். பெயரையும் மாற்றி மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். இதுவரை சிறுமியிடம் 8 முறை கருமுட்டை பெற்றுள்ளனர். கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று தாய் மற்றும் வளர்ப்பு தந்தை இருவரும் மிரட்டி வந்ததால் சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் கடந்த மாதம் 20ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி, சித்தி, சித்தப்பா ஆகியோரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தாய், வளர்ப்பு தந்தை மற்றும் மாலதி ஆகியோரை கைது செய்துள்ளனர்…