ஈரோடு மாவட்டத்தில் 217 பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி-தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கல்

ஈரோடு : தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், செய்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து நடத்தப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் மற்றும் தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 படித்து வந்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கப்பட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் பட்டியலில், 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் சாரசரி மதிப்பெண் 50 சதவீதமும், பிளஸ் 1 வகுப்பில் எழுத்து தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதமும், பிளஸ் 2 அகமதிப்பீட்டில் பெற்ற 30 சதவீதம் என மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 98 அரசு மேல்நிலைப்பள்ளி, 6 நகராட்சி மேல்நிலைப்பள்ளி, 12 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 2 ஆதிதிராவிட நல பள்ளிகள், 82 மெட்ரிக் பள்ளிகள், 17 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 217 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 11,278 மாணவிகள், 12,612 மாணவிகள் என மொத்தம் 23,890 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 96.99 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிகளுக்கு வந்து இணையதளத்தில் ஆசிரியர்களின் உதவியுடன் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்று சென்றனர். சிலர் இ-சேவை மையம், கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். பிளஸ் 2 மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரோடு மாவட்டத்தில் 217 பள்ளிகளில் பிளஸ் 2 படித்த அனைத்து மாணவ-மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் அந்தந்த பள்ளியில் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் அவர்களது பெயர், பிறந்த தேதி, வருடம், மாதம் போன்றவற்றில் பிழை இருந்தால் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியிடம் தெரிவித்து, முறையாக விண்ணப்பித்து அந்த பிழைகளை அசல் சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ளலாம்’’ என்றார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை