பந்தலூர்: பந்தலூர் அருகே பழுதடைந்ததால் இழுத்து பூட்டப்பட்ட முதரகொள்ளி அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முதரக்கொள்ளி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடங்கள் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழுதடைந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதனால், மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அதனால் கடந்த பல மாதங்களாக பள்ளி கட்டிடம் பயன்படுத்தமுடியாமல் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுதும் இதுபோல உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து தரமில்லாமல் இருந்தால் அதனை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டவேண்டும் என்னும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது தொடர்மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முதரப்பள்ளியில் உள்ள பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை மாணவர்கள் நலன் கருதி, உடனடியாக கல்வித்துறை அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்….