கிருஷ்ணகிரி, மே 28: இளைஞர்கள் விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய அரசின் சார்பில், 2023ம் ஆண்டிற்கான(2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சாதனை புரிந்தவர்கள்) டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சாகச துறைகளில் உள்ள நபர்களின் சாதனைகளை அங்கீகரித்திடும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
இளம் வயதில் வீர-தீர செயல் புரிந்தவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், குழு உறுப்பினர்களாகவும், சரியான நேரத்தில், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவர்களாகவும், பல உயிர்களை காப்பாற்றியவர்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீர-தீர செயல்புரிந்தவர்கள் இவ்விருதுக்கு தகுதியானவர்கள். இவ்வீரதீர செயல் மலையேற்றத்திற்கும், அதாவது மூன்று நிலைகளில் நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவர்கள் ஆகியோர் தகுதியுடையவர்கள் ஆவர். இவ்விருது பெறுபவர்களுக்கு, ₹15 லட்சம் வழங்கப்படுவதுடன், வெண்கல சிலை, சான்றிதழ், சில்க் டைகொண்டபிளேசர் ஆகியவை வழங்கப்படும். இவ்விருதிற்கு இணையதள முகவரி மூலம், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.