ஊத்தங்கரை, ஜூன் 27: பர்கூர் அடுத்த சிவம்பட்டி அருகேயுள்ள மந்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(37). இவர் புதுச்சேரியில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு ஐஸ்வர்யா(27) என்ற மனைவியும் மகன், மகளும் உள்ளனர். கடந்த 24ம் தேதி, வீட்டில் இருந்த ஐஸ்வர்யா திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜேஷ் மத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் (52) என்பவர், தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.