சேலம்: உத்தரபிரதேச மாநிலம் ஜெயின்பூர் குஷிநகரைச் சேர்ந்தவர் சைலேஷ். இவர், தனது மனைவி கிரண்தேவி (20) என்பவருடன் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி அமரத்தானூரில் வசித்து வருகிறார். கிரண்தேவி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். அங்கு கடை உரிமையாளர் கலையரசியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (36) வந்துள்ளார். அவர் இருவரையும் முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை கிரண்தேவியும், கலையரசியும் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து வந்து என்னையே எதிர்த்து பேசுகிறாயா? எனக் கூறி சோடா பாட்டிலை எடுத்து உடைத்து கிரண்தேவியை செல்வராஜ் தாக்கினார். அதில் கையில் குத்துப்பட்டு ரத்தக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை மிரட்டி விட்டு செல்வராஜ் சென்றுள்ளார். காயமடைந்த கிரண்தேவியை மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மேச்சேரி போலீசில் கிரண்தேவி புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, செல்வராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணை சோடா பாட்டிலால் குத்திய வாலிபர்
previous post