திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் பழங்குடியின மக்கள் புகார் மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு: கும்மிடிப்பூண்டி வட்டம் பாதிரிவேடு அரக்காத்தம்மன் கோயில் குளக்கரையில் 35 பழங்குடியின குடும்பத்தினர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறோம். நாங்கள் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி கலெக்டர், பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி 35 பழங்குடியின குடும்பத்தினருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்….