சென்னை: இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை சிறைகளிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2021 டிச.19 மற்றும் 20ம் தேதியிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் வேண்டும். வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது….