சேந்தமங்கலம், நவ.23: புதுச்சத்திரம் பகுதியில் சாலை ஓரங்களில் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டினால், உரிமையாளருக்கு ₹2000 அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி தோட்டக்கூர்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் கூறியிருப்பதாவது: புதுச்சத்திரம் ஊராட்சியில் பேக்கரிகள், டீக்கடைகள், கோழி இறைச்சி கடைகள், உணவகங்கள் மற்றும் சலூன் கடைகளில், கழிவுகளை ஊராட்சியால் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். இதனை மீறி, பொது இடங்களில், சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, ₹2 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், கடைக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.