வேலூர், செப்.24: காட்பாடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரின் பற்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். வேலூர் காட்பாடியில் சித்தூர் ரோட்டில் இயங்கி வரும் எம் சாண்ட் நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கோட்டை மருதூர் கிராமத்தை சேரந்்த கணேஷ்(22) என்பவர் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் காட்பாடி அடுத்த உண்ணாமலை சமுத்திரத்தை சேர்ந்த சதீஷ்(33) என்பவரும் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் போதையில் இருந்த நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சதீஷ், அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து கணேஷை சரமாரியாக தாக்கினார். இதில் கணேஷின் 4 பற்கள் உடைந்ததுடன், தலை, கை, கால்களில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக கணேஷ் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை நேற்று கைது செய்தனர்.