கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவியர் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக மாணவியர் விடுதிக்கு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்திருந்தனர். நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று இரவு 5 பேர் மீண்டும் விடுதிக்குள் புகுந்துள்ளனர். அதில் ஒருவர் நிர்வாணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் தங்கி பயின்று வரும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமர வைத்தனர். பின் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகள் பாதுகாப்பு குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகள் போராட்டம் கைவிடப்பட்டது….