சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கோஷ்டியுடன் மோதி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு நடக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனராகவும் உள்ள பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்; அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற பழனிசாமி ரூ.1,000 கோடி செலவிட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி இடையேயான மோதல் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து உள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை முடக்க நடவடிக்கை கோரி ஜூன் 26ல் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. …