தூத்துக்குடி, செப். 10: தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இமானுவேல் சேகரனார் 67வது நினைவு தினம் நாளை (11ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பரமகுடிக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே (கார் மட்டும்) செல்ல வேண்டும், வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர், மினிடெம்போ போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. மேலும் அஞ்சலி செலுத்த செல்பவர்கள் உட்கோட்ட காவல் அலுவலகங்கள் மூலம் பெறப்பட்ட வாகன அனுமதி சீட்டை தங்களது வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டி செல்ல வேண்டும்.
அனுமதி சீட்டு இல்லாமல் செல்ல அனுமதி இல்லை.
வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனங்களில் மேற்கூரையில் அல்லது படிக்கட்டில் பயணித்தோ, ஒலிப்பெருக்கிகள் பொருத்தியோ செல்ல கூடாது. வாகனங்களில் ஆயுதம் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை. எந்தவித மதுபானங்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.