திருவாரூர், செப்.11: டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொது செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கர்நாடக அரசு மற்றும் காவிரி ஆணையத்தின் வஞ்சகம் காரணமாக தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்காததால் நடப்பாண்டில் மேட்டூர் அணை ஜுன் 12 திறக்க முடியாமல் போனது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறைந்த அளவிலேயே குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இடையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக மேட்டூர் அணை திறக்கபட்ட போதிலும் பாசன வாய்க்கால்களில் நீர் செல்லாததன் காரணமாக குறுவை பயிர் பாதிக்கபட்டுள்ளது.
மேலும் நேரடி விதைப்பாக மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடி மற்றும் விதை நாற்றாங்கால் அமைக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உரிய அளவில் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளவும், குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை பயிரை காப்பாற்றவும் உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசையும், நீர்வளத்துறை அமைச்சரையும் கேட்டுகொள்கிறோம்.