செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 6ம் தேதி நிறைவடைந்தது. அதைதொடர்ந்து அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், காட்டாங்கொளத்துர், சித்தாமூர் ஆகிய ஒன்றியங்களுக்கு இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 80 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 199 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,449 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, அச்சிறுப்பாக்கத்தில் 204, மதுராந்தகம் 232, காட்டாங்கொளத்துரில் 368, சித்தாமூரில் 166 என மொத்தம் 970 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 80 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் வெப் ஸ்ட்ரிமிங் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் மூலமாக வாக்குப்பதிவு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட உள்ளன. மேலும், மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேட்பாளர்கள், அவர்களது முகவர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை. வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு செல்போன் எடுத்துவர அனுமதி இல்லை. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு மட்டும் வாக்கு சதவீத விவரங்களை வழங்கும் பொருட்டு செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது….