புதுடெல்லி: டெல்லியில் கர்ப்பிணி டாக்டர் கொரோனாவால் இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த பல் மருத்துவர் டிம்பிள் அரோரா சாவ்லா (34) கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தனது வயிற்றில் இருந்த 7 மாத சிசு குறை பிரசவத்துடன் இறந்து பிறந்தது. அடுத்த நாள் அரோரா சாவ்லாவும், சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது, அவரது மூன்று வயது மகனும், கணவனும் விரக்தியில் உள்ளனர். அரோரா சாவ்லா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினர், நண்பர்களுக்காக 2 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த வீடியோவை அவரது கணவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா என்ற கொடிய வைரஸை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த வீடியோவை மிகவும் சிரமத்துடன் வெளியிடுகிறேன். தயவுசெய்து முகக் கவசங்களை அணியுங்கள். நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள். வீட்டிலோ அல்லது வெளியிலோ மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், கட்டாயம் முகக்கவசம் அணிந்து பேசுங்கள்’ என்று உருக்கத்துடன் தெரிவித்தார். இந்நிலையில், அரோராவின் கணவர் ரவிஷ் சாவ்லா கூறுகையில், ‘குழந்தை அவள் வயிற்றிலேயே இறந்துவிட்டது. நான் அவளிடம் அதை சொல்லவில்லை. ஆனால் டாக்டர்கள் சிசேரியன் செய்ய வேண்டும். அதனால் அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறினர். வேறுவழியின்றி அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுத்த அடுத்த நாள் அவளும் இறந்தாள். எனது மனைவியின் கடைசி விருப்பங்களை மதிக்கிறேன். விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அவள் வெளியிட்ட வீடியோ செய்தியை சமூக ஊடகங்களில் தற்போது வெளியிட்டுள்ளேன். இவ்வாறு செய்ததால், மக்கள் யாரும் தொற்றுநோயை லேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவரது அகால மறைவு செய்தியை, இந்த உலகிற்கு கொண்டு செல்லவே இந்த வீடியோவை வெளியிட்டேன்’ என்று ேசாகத்துடன் தெரிவித்தார்….