இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு

 

மதுரை, மே 20: இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரை ரங்கராஜன் என்பவர் அணுகி, இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரசேகர் தனது மகன் மற்றும் மருமகள், உறவினர்களுக்கு வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு பல தவணையாக ரூ.40 லட்சம் வரை சந்திரசேகர் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட ரங்கராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

இந்த ஆணையுடன் இந்து சமய அறநிலையத்துறையில் வேலையில் சேர சென்றபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகர் கேட்டபோது ரங்கராஜன், அவரது மனைவி பூங்கோதை, மகன் கார்த்தி, மகள்கள் சங்கீதா, புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சந்திரசேகர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரங்கராஜன் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து