மாஸ்கோ: இந்திய மாணவர்களை உக்ரைன் அரசு மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் சிலரை பணய கைதியாக உக்ரைன் வைத்திருப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்த நினைப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் புதன்கிழமை தொலைபேசியில் உறையாடியபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் நடந்து வரும் கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை அவசரகால நடவடிக்கையாக மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பான வழித்தடம் மூலமாக ரஷ்யாவுக்குள் அழைத்து வர ராணுவத்திற்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டதாக அதிபர் மாளிகையான கிரம்ப்ளின் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை அனுமதிக்காமல் உக்ரைன் ராணுவம் தடுப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதை மறுத்துள்ள உக்ரைன் அரசு, மாணவர்கள் யாரையும் தாங்கள் பணய கைதியாக வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மாறாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மாணவர்களை ரஷ்யா தான் பணய கைதியாக வைத்திருப்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக எல்லையை விட்டு வெளியேற செய்ய பாதுகாப்பு வழித்தடத்தை ரஷ்ய ராணுவம் ஏற்படுத்த கேட்டுக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் தூதர் தெரிவித்திருக்கிறார். …