சென்னை, : இந்தியாவில் அதிக வட்டி தரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என போக்குவரத்து துறை செயலாளர் கோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் கழகம், தமிழ்நாடு அரசால் 1975ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு வகுக்கும் நெறிமுறை மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் நடக்கின்றன. இந்த நிறுவனம் சென்னையின் மையப்பகுதியான வாலாஜா சாலையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வைப்புநிதி பெறப்படுகிறது. அந்த வைப்புநிதிகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் இரண்டு திட்டங்களில் அளிக்கப்படுகிறது. அதாவது மாதவட்டி, காலாண்டு வட்டி மற்றும் வருடாந்திர வட்டியாகவும் அளிக்கப்படுகிறது. மற்றொரு திட்டமான “பணபெருக்கி” திட்டத்தில் வைப்பீடு முதிர்வடையும்பொழுது வட்டியுடன், முதலீடு திரும்ப அளிக்கும் திட்டம் உள்ளது.மேலும் இங்கு பொதுமக்கள் மட்டுமில்லாமல் கம்பெனி, கூட்டுறவு, கோயில், கல்வி சாலைகள், பல்கலைக்கழகம், நம்பகம் மற்றும் அரசு துறைகளிலிருந்து வைப்புநிதி பெறப்படுகிறது. 47 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில், இங்கு முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானது, பத்திரமானது என்பதால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வைப்புநிதி செலுத்த மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு குறைந்தபட்ச வைப்புநிதி தொகை ரூ.50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் முதலீடுகள் 400 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தொடர் வெற்றிக்கு காரணம் சிறந்த நிர்வாகம், அறிவார்ந்த மேலாண்மை, அரசின் வழிநடத்தல் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை. இந்த நிறுவனத்தில் 5 வகைகளில் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு வரை முதலீடு பெறப்படுகிறது. தற்பொழுது இந்நிறுவனத்தில் ஒராண்டு கால வைப்பு நிதிக்கு 7 சதவீதம் வட்டியும், 2 வருட கால வைப்பு நிதிக்கு 7.25 சதவீதம் வட்டியும், 3 மற்றும் 4 வருட கால வைப்பு நிதிக்கு 7.75 சதவீதம் வட்டியும், 5 வருட கால வைப்பு நிதிக்கு 8.00 சதவீதம் வட்டியும், வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.25 முதல் 0.50 வட்டி உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கு (58 வயது நிறைவடைந்தவர்கள்) 5 வருடங்களுக்கு சேர்ந்த வட்டியாக 10.46 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. முறையான சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் வருமான வரி பிடித்தம் தவிர்க்கப்படும்.ஒரு வருட, மாத வட்டியாக 7 சதவீதம் முதல் மற்றும் 5 வருட முதலீடு பெருக்கிடும் திட்டத்தில் 10.46 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டிக்கு வட்டி அளிப்பதனால் முதலீடு முதிர்வடையும் போது, நிகர வட்டி அதிகமாக கிடைக்கிறது. இங்கு வைப்புத் தொகையானது காசோலை மூலமாகவும், RTGS& NEFT மூலமாகவும் முதலீடு செய்யலாம். இந்நிறுவனத்தின் மற்றும் பல தகவல்களை தெரிந்துகொள்ள www.tdfc.in, தொலைபேசி எண் (044) 25333930 மற்றும் இணை மேலாண் இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….