கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்காரின் டிவிட்டர் கணக்கை தான் பிளாக் செய்து விட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘ஆளுநர் ஜெகதீப் தன்கார் நாள்தோறும் எனது அரசுக்கு எதிரான செய்திகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றார். இதனால் நான் அமைதியிழந்தேன். எனவே ஆளுரின் டிவிட்டர் பக்கத்தை நான் பிளாக் செய்து விட்டேன். அவர் பல முறை தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குனர் ஜெனரலை மிரட்டியுள்ளார். ஆளுநர் தன்காரை நீக்க வலியுறுத்தி பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டேன். எனினும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என்றார். …