ஆர்எஸ்.மங்கலம், மே 28: ஆர்எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பச்சனத்தி கோட்டை பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பது சம்பந்தமாக கலா என்பவரது குடும்பத்தினருக்கும், ஊராட்சி செயலர் அபுதாகிருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் ஆர்எஸ்.மங்கலம் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கலா காரைக்குடிக்கு காரில் சென்றுள்ளார். காரை அவரது சகோதரர் நீதிதேவன் ஓட்டி வந்துள்ளார்.
ஆனந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது காரை ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அக்கும்பல் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், கலா, நீதிதேவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் கலா அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கலா ஆர்எஸ்.மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ பூமிநாதன் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 23 பேர் மீது வழக்குப்பதிந்து அதில் 7 பேரை கைது செய்தனர். பின்னர் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.