கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், 19ம் தேதி விநாயகர், லட்சுமி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், 20ம் தேதி சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, மஹா அபிஷேகமும், எஜமான சங்கல்பம், அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, ரக்க்ஷா பந்தனம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, நேற்று மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி திருமஞ்சனமும், மகா பூர்ணாஹுதி யாத்ராதானம் ஆகியவையும் பின்னர், யாகசாலையில் இருந்து சென்ன பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில் புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து, ராஜகோபுரம வலம் வந்து 25 அடி ஆஞ்சநேயருக்கு சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இந்த, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிற்பகல் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், மதியம் 12 மணிக்கு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவும் நடைபெற்றது. இதில் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.