டெல்லி: ஆப்கான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது.இந்த நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின. இதனையடுத்து தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.இதனை கண்டு கொள்ளாமல் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நிலவரத்தின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டொர் பங்கேற்க உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது….