கீழக்கரை: இளைஞர்கள் மனதைக் கெடுக்கும் வகையில், ஆபாச வீடியோக்கள் பதிவிட்ட டிக்-டாக் பிரபலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். டிக்-டாக் பிரபலங்களான ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிடுகின்றனர். இதனைக் காணும் மாணவ, மாணவியர், இளைஞர்கள் மனம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் புகார் தெரவிக்கின்றனர். ‘‘இளைஞர்கள் மனதைக் கெடுக்கும் வகையில் வீடியோ பதிவிடும் இந்த டிக்-டாக் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவர்களது இந்த வீடியோக்கள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை வேண்டும்’’ என்று கீழக்கரையை சேர்ந்த வக்கீல் எம்.எம்.கே.முஹைதீன் இப்ராஹிம், ராமநாதபுரம் எஸ்பிக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மனு அனுப்பிய ஒரே நாளில் ‘‘ரவுடி பேபி’’ சூர்யா மட்டும் தனது வீடியோக்களை நீக்கி இருந்தார். இதற்கிடையில் தபால் மூலம் அனுப்பிய புகார், ராமநாதபுரம் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்று, சைபர் கிரைம் துறையில் ஒப்படைக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சரவண பாண்டியன் கூறும்போது, ‘‘புகார் குறித்து மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய ஆலோசனை பெற்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்….