சிதம்பரம், ஜூன் 19: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ம் நாள் திருவிழாவான நேற்று காலை வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. மாலையிலும் வீதி உலா நடைபெற்றது. கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் சுவாமி வீதி உலா வந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று தங்க சூரிய பிறை வாகனத்திலும், 20ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 21ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 22ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 23ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 24ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 25ம் தேதி தேர் திருவிழாவும், 26ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.