மானாமதுரை, ஆக.6: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் ஆடித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மானாமதுரை மேல்கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆடி மாதங்களில் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னம், மயில், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் காட்சியளிப்பார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் திருநாள் ஆனந்தவல்லி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுவார். முக்கிய விழாவான ஆக.16ம் தேதி பத்தாம் நாள் திருவிழாவில் ஆனந்த வல்லியம்மன் தபசு திருக்கோலத்தில் காட்சியளிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.