திருமலை: ஆந்திராவில் சோதனையில் பிடிபட்ட ரூ.850 கோடி மதிப்புள்ள 2 லட்சம் கிலோ கஞ்சாவை 12 இடங்களில் மலைபோல் குவித்து டிஜிபி கவுதம் சவாங் தீயிட்டு கொளுத்தினார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய 4 மாவட்டங்களில் கஞ்சா, போதை பொருட்களை தடுக்க ‘ஆபரேஷன் பரிவர்த்தனா’ திட்டம் தொடங்கப்பட்டது. இதில் உள்ள தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, கஞ்சாவை பறிமுதல் செய்து வந்தனர். அந்த வகையில், ரூ.850 கோடி மதிப்புள்ள 2 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்ற போலீசார், பெரிய மைதானத்தில் 12 இடங்களில் மலைபோல் குவித்தனர். இம்மாநில டிஜிபி கவுதம் சவாங் நேற்று இவற்றை கொளுத்தினார். அதனால், அந்த பகுதியே புகை மண்டலமானது. பின்னர், டிஜிபி கவுதம் சவாங் அளித்த பேட்டியில், ‘‘ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள குக்கிராமங்களில் கஞ்சாவை பயிரிட்டு, நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் கடத்தி வருகின்றனர். இவற்றை வளர்க்க நக்சல்கள் உதவி செய்து, பணம் சம்பாதிக்கின்றனர். ஒடிசாவின் 23 மாவட்டங்களிலும், ஆந்திராவில் விசாகப்பட்டினம் மலை கிராமங்களில் 11 மண்டலங்களிலும் கஞ்சா பயிரிடப்படுகிறது,’’ என்றார்….