ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம், மே 13: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில், ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். ஆவின் பாலகம் அமைக்கும் இத்திட்டத்தில், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து, ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ₹2.25 லட்சம் மானியம் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ₹3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு காஞ்சிபுரம் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை