ஜெயங்கொண்டம், செப்.13: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தஞ்சாவூரான்சாவடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒரு மினி பவர் டேங்க், சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டியும் உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வராததால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
தாமதமானதை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென ஸ்ரீமுஷ்ணம்- ஆண்டிமடம் நெடுஞ்சாலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட வந்த போது தகவல் அறிந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு நாளில் குடிநீர் ஏற்பாடு செய்வதாகவும் அதோடு புதியதாக மின் மோட்டார் அமைக்க போவதாகவும் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.