Thursday, September 19, 2024
Home » ஆட்டம் காணும் 1,200 கோடி கால்நடை பூங்கா கட்டிடம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஆட்டம் காணும் 1,200 கோடி கால்நடை பூங்கா கட்டிடம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘என்னது சென்னை புளியந்தோப்பு… தேனி மாவட்டத்துக்கு எப்போ இடம் மாறிப்போச்சு…’’ என நக்கலடித்தார் பீட்டர் மாமா. ‘‘புளியந்தோப்பு அடுக்கு மாடி விவகாரம், தேனி மாவட்ட கான்ட்ராக்டர்கள் மத்தியிலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இலைக்கட்சி ஆட்சி காலத்தில் இந்த மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் கட்டினர். இதற்காக விண்ணப்பங்களும் தாலுகா வாரியாக வாங்கினாங்களாம். இதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அதிர்ச்சியில் இருக்காங்களாம். காரணம், சென்னை புளியந்தோப்பில் அரசு குடியிருப்பு தரமற்றதாக கட்டி, இடியும் தருவாயில் இருப்பது ‘‘தர்மயுத்த நாயகருக்கு’’ நெருக்கடி தந்திருக்கிறது. அவருக்கு வேண்டியவர்களே ‘‘தேனி’’ மாவட்டத்திலும் கான்ட்ராக்ட் எடுத்து கட்டிடங்கள் கட்டி இருப்பதால், சென்னை புளியந்தோப்பு கட்டிடங்கள் மாதிரி தேனி மாவட்டத்திலும் தரமற்ற கட்டிடங்கள் கட்டி இருப்பார்களோ என்ற சந்தேகம் சென்னை மக்களை போலவே, தேனி மக்களின் மனதிலும் கேள்ளி இடம் மாறி உள்ளதாம். மற்றபடி சென்னை புளியந்தோப்பு தேனிக்கு மாறவில்லை. தர்மயுத்த நாயகருக்கு வேண்டியவர்கள் கட்டிய கட்டிடம் என்பதால், இதனை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே சலுகை விற்பனைக்கென அனுமதிக்க வேண்டுமெனவும் சமூக வலைத்தளப்பதிவுகள் தினந்தோறும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தேனிக்காரருக்கு தலைவலியை உண்டு பண்ணி இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘பொறுப்பே இல்லாமல், முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரியை என்னவென்று சொல்வது…’’ தலையில் அடித்துக் கொண்டார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டத்தில் சப்-கலெக்டராக பணியாற்றிய சிவமானவர், கடந்த ஜூன் மாதம் இறுதியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டராக மாற்றப்பட்டார். எனினும் அல்வா மாவட்டத்துக்கு புதிய அதிகாரி நியமிக்கப்படாததால் சிவமானவரே கூடுதல் பணியாக கவனித்து வந்தார். இதையடுத்து அல்வா கோட்ட ஆர்டிஓவாக பாலான பெயரைக் கொண்ட அதிகாரியை நியமித்து வருவாய் துறை செயலாளர் உத்தரவிட்டார். ஆனால் அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அல்வா கோட்டத்தில் பொறுப்பேற்கவில்லையாம். இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆர்டிஓ பணியிடத்தை பொறுப்பு அதிகாரி தான் கவனித்து வருகிறார்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆட்சி போனதால இலை கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு இருக்காமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல குப்பம்னு முடியுற தொகுதியில நாதன் பெயரை கொண்டவர் எக்ஸ் எம்எல்ஏ இருக்காரு, அதோட ஒன்றிய செயலாளராகவும் இருக்காரு. இவருக்கும், அதே இலைகட்சியில பெருமாள் பெயரை கொண்ட மேற்கு ஒன்றியத்தோட செயலாளருக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் தானாம். இது ஊர் அறிந்த விஷயமாம். இப்ப அந்த தொகுதிக்கு புது எம்எல்ஏ வந்த பின்னாடி, எக்ஸ் எம்எல்ஏவை தொகுதியில நடக்குற எந்த நிகழ்ச்சிக்கும் மேற்கு ஒன்றிய செயலாளரு அழைப்பு விடுக்குறதில்லையாம். தொகுதிக்குள்ள நடக்குற நிகழ்ச்சிங்களுக்கும் புது எம்எல்ஏவை மட்டும் அழைக்குறாராம். அதோட, கட்சி சம்மந்தப்பட்ட போஸ்டர், பேனருன்னு எல்லா விளம்பரங்கள்லயும் எக்ஸ் எம்எல்ஏவோட பெயர், போட்டோன்னு எதையும் போடுறதில்லையாம். இதனால எக்ஸ் எம்எல்ஏ நாதன் ஆதரவாளருங்க கொதிப்படைச்சு போயிருக்காங்களாம். இதனால குப்பம் தொகுதியில இலைகட்சியில அடிக்கடி உரசல் ஏற்பட்டு வருதாம். இந்த உரசல் உள்ளாட்சி தேர்தல் வெளிப்படும்னு இலைகட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘விதிகளை மீறி அனுமதி தர கரன்சி கேட்கும் காக்கிகள் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கொரோனா கால கட்டமாக இருப்பதால் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் திருமணங்கள் நடத்துபவர்கள் அந்தந்த ஆர்.டி.ஓ.க்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த அனுமதி சான்றை, திருமண மண்டபங்களிலும் சமர்ப்பிக்க வேண்டும். திருமணம் நடத்துவதற்கான அனுமதி விண்ணப்பத்தை கோட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து, அன்றைய தேதிக்கான நிகழ்ச்சியாக பதிவு செய்யப்படுகிறது.திருமணத்தன்று மண்டபத்தில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட போலீசார், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்யலாம். இந்த நிலையில் இவ்வாறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் திருமண விண்ணப்பதாரர்களை அழைத்து, சில காவல் நிலையங்களில் ரூ.1000 வரை வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில், ஸ்டேஷன் ரைட்டர்கள் சிலரே, ஆயிரத்தை வாங்கி ஆட்டைய போட்டு விடுகிறார்கள். சமீபத்தில் ஒரு காவல் நிலையத்தில் ரூ.1000 வாங்கிய விவரம், எஸ்.பி. ஆபீஸ் வரை சென்று விஸ்வரூபம் எடுத்துள்ளது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிரமாண்டம் என்று சொல்லி 1200 கோடியில் கட்டிய கால்நடை பூங்காவும் ஆட்டம் காணுதாமே… அப்டியா…’’ என்றார் ‘‘ஆசியாவிலேயே மிகவும் பிரமாண்டமான கால்நடை பூங்கா ரூ.1200 கோடி செலவுல, மாங்கனி மாவட்டம் தலைவாசலில் கடந்த இலைஆட்சியின் போது கட்டி முடிக்க பிளான் போட்டாங்க. அப்போதிருந்த முக்கிய மந்திரி, தனது கனவு திட்டமுன்னு அமெரிக்காவுக்கு போய் பசுவுக்கு உணவு கொடுத்த காட்சி, கட்சிக்காரங்க மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு. ஆனா பாருங்க ரூ.1200 கோடியில கட்டின கட்டிடத்தை பார்த்தா நெஞ்சே பதைபதைக்குதாம். எல்லாமே அவசர அவசரமா கட்டப்பட்டதால, பினிஷிங் ஏதோ தானோன்னு இருப்பதா சொல்றாங்க. சென்னையில குடிசை மாற்றுவாரிய குடியிருப்புக்களை பிஸ்கட் பிய்ப்பது போல பிச்சு எடுத்தாங்க. இது தொடர்பா இலைக்கட்சி ஆட்சியில கட்டிய கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேபோல, இந்த கால்நடை பூங்கா கட்டிடத்தையும் ஆய்வு செய்யனும்னு இலைக்கட்சிக்காரங்களே வலியுறுத்துவது தான் இந்த பிரச்னையின் முக்கிய டிவிஸ்ட்டே. இந்த கட்டிடத்த கட்டும்போது அமைச்சர் ஒருவர் அடிக்கடி வந்து பாத்துட்டு செல்வாராம். அப்போ விவிஐபியின் நிழலாக வலம் வந்தவரு, மந்திரிய மாமா மாமான்னு அன்போடு அழைப்பாராம். மந்திரியும் மாப்ளே மாப்ளேன்னு சொல்லுவாராம். கால்நடை பூங்கா கட்டிடம் எழும்ப எழும்ப, ஆத்தூரில் அவருக்கு சொந்தமா பிரமாண்டமான பங்களா ஒன்றும் எழுந்து நிக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

You may also like

Leave a Comment

nineteen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi