திருவிடைமருதூர், செப். 3: ஆடுதுறை பேரூராட்சி கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கமலா, செயல் அலுவலர் ராம்பிரசாத், இளநிலைப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கவுன்சிலர் பரமேஸ்வரி வரவேற்றார். இதில் திருநீலக்குடி சாலை கால்நடை மருத்துவமனை அருகே மற்றும் உள்விளையாட்டு அரங்கம் இறகு பந்து விளையாட்டு மைதானத்திலும் சிறிய மின்விசை பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு ரூ.9.15 லட்சத்தில் அமைக்கப்படும். ஆர்.ஆர் பார்க் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ரூ.12 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படும். உள்விளையாட்டு அரங்கம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் டானரி தெருவில் பேவர் பிளாக் சாலை ரூ.12.20 லட்சத்தில் அமைக்கப்படும்.
ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட், நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டடங்கள் அமைக்கும் வகையில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 17 லட்சத்தில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி ஏற்கப்படுகிறது.திடக்கழிவு மேலாண்மை பணிக்கு ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்வதென்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரமேஸ்வரி, சுகந்தி, சரவணன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். முடிவில் கவுன்சிலர் மீனாட்சி நன்றி கூறினார்.