அவனியாபுரம்: மதுரை, அவனியாபுரம் அருகே பெருங்குடியில் தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து நேற்று அதிகாலை 7 பேர் தப்பி ஓடினர். இதில் திருமங்கலத்தை சேர்ந்த கருப்பையா (45) மறுவாழ்வு மையத்தின் அருகிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், ‘‘மறுவாழ்வு மையத்தில் இருந்த 7 பேர் அதிகாலை தப்பித்து சென்றதாக தெரிகிறது. இதில் 3 பேர் வீட்டுக்கு சென்று விட்டனர். மற்ற 3 பேர் இன்னும் அவர்களது வீட்டிற்கு செல்லவில்லை. கருப்பையா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து மறுவாழ்வு மைய உரிமையாளரிடமும் விசாரித்து வருகிறோம்’’ என்றனர். …