அலங்காநல்லூர். பிப். 18: அலங்காநல்லூர் அருகே சேதமடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். புதிய கட்டிட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அலங்காநல்லூர் ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அலங்காநல்லூரில் இருந்து அழகர்கோவில் செல்லும் சாலையில் உள்ளது மேட்டுப்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அதன்பிறகு சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாததால், தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதால் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திற்கு ஊராட்சி மன்ற அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.சமுதாயக்கூடத்தில் தேவையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், ஊராட்சி கோப்புகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள உள்ளதாகவும் யூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஊராட்சி மன்றத்திற்கான புதிய கட்டிட பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.