பல்லடம், மே 31: பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து வலுப்பூர் அம்மன் கோயில் செல்லும் சாலையை இணைக்கும் விதமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து போடப்பட்டு சமன்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு அடுத்தக்கட்ட பணியும் தொடங்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நிலை மாறி உள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த சாலையை தார் சாலையாக உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.