அரூர், ஏப்.6: அருரில் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கம் நிலையில், அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதால், அனல்காற்று வீசியது. பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதே சமயம், அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டவாறு இயக்கப்படுகிறது. தொடர்ந்து, மதிய நேரத்தில் கடும் வெயில் வாட்டியெடுக்கிறது. அதிகாலை பனி மூட்டமும், பகலில் கடும் வெயிலும் அடிப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.