அருமனை, செப்.25: அருமனை அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவியை கம்பியால் குத்திய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். அருமனை அருகே மஞ்சாலுமூடு முக்கூட்டுக்கல் வெட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சத்தியதாஸ் (51). முன்னாள் ராணுவ வீரர். அவரது மனைவி சரிதா (44). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சமீபகாலமாக சத்தியதாசின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்து உள்ளது. இதனால் சரிதா கணவரை சந்தேகப்பட்டாராம். இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவிலும் இதுபோன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியதாஸ் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சரிதாவின் தலையில் குத்தினார். இதில் படுகாயமடைந்த சரிதா ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சத்தியதாஸ் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சரிதாவை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சத்தியதாசை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.