அரியலூர், ஜூன் 21: அரியலூர் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர் வட்டத்திற்கான ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் முதல் நாளில் அரியலூர் உள்வட்டம், அரியலூர் தெற்கு , அரியலூர் வடக்கு ,விளாங்குடி, ராயபுரம் , உட்பட 18 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 419 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது விரைவாக உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
மேலும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ஆனந்தவேல், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.