அரவக்குறிச்சி, செப். 30: அரவக்குறிச்சி வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் ஆத்மா திட்டத்தில் சேலம் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திற்கு விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர். அரவக்குறிச்சி வட்டாரம், வேளாண்மை துறையின் கீழ் சேலத்தில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர் ஆகிய இடங்களுக்கு விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா சென்றனர். அங்கு, தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சுற்றுலாவில் விவசாயிகளுக்கு ஏத்தாப்பூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், ஏத்தாப்பூர்1, ஏத்தாப்பூர் 2 ஆகிய ரகங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து பேராசிரியர்கள் ரஞ்சித் குமார், முல்லைமாரன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
பூச்சியில் பேராசிரியர் பிரபாவதி விவசாயிகளுக்கு பூச்சி தாக்கத்திலிருந்து எவ்வாறு பயிர்களை பாதுகாப்பது எனவும் பூச்சிகளை இனக்கவர்ச்சி பொறி, சோலார் விளக்கு பொறி, மஞ்சள் வண்ண அட்டை இவைகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண் அறிவியல் நிலையத்தில் டாக்டர் பிரபாகரன் விவசாயிகளுக்கு சிறுதானிய மதிப்பூட்டும் இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கம் அளித்தார்.
மேலும், காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், அசோலா வளர்ப்பு, மாடித்தோட்டம், குறித்த செயல் விளக்கங்களை வயல்வெளியில் அழைத்துச் சென்று காண்பித்து விவசாயிகளுக்கு தொழில் நுட்ப விளக்கமளித்தார். இந்த கண்டுணர்வு சுற்றுலாவிற்கு அரவக்குறிச்சி வட்டாரத்திலிருந்து 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.