விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை டாக்டர்கள் மாற்றி விட்டதாக குழந்தையின் தந்தை புகார் செய்துள்ளார்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குன்னத்தூரை சேர்ந்த சங்கிலி மனைவி சுப்புலட்சுமி(31) என்பவரை பிரசவத்திற்கு நேற்று முன்தினம் சேர்த்துள்ளனர். நேற்று காலை 11.23 மணியளவில் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சுப்புலட்சுமியின் தாய் ராமாயிடம் தெரிவித்தனர். மதியம் ஒரு மணிக்கு திடீரென சுப்புலட்சுமிக்கு பிறந்தது பெண் குழந்தை என காட்டி உள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை சங்கிலி கூறுகையில், சுப்புலட்சுமியுடன் 2019ல் திருமணம் நடந்து. குழந்தை உருவானது முதல் டி.கல்லுப்பட்டி அரசு மருத்துவமனையில் காட்டி வந்துள்ளேன். தனியார் ஸ்கேன் சென்டர்களில் 5 ஸ்கேன்கள் எடுத்துள்ளேன். அனைத்து ஸ்கேன்களிலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து நேற்று காலை 11.23க்கு என் மாமியாரிடம், ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தவர்கள், மதியம் ஒரு மணிக்கு பெண் குழந்தையை காட்டுகின்றனர். குழந்தையின் கை,கால்கள் விரல்களின்றி இருக்கிறது. முதலில் இரண்டு சிசேரியன் நடந்ததாக கூறியவர்கள், போலீசாரிடம் மூன்று சிசேரியன் நடந்தாக கூறுகின்றனர். எங்களது குழந்தையை மாற்றி விட்டனர். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உறுதிபடுத்திய பிறகே குழந்தையை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர். சங்குமணி கூறுகையில்,“ குழந்தையை மாற்றி விட்டதாக கூறுவது தவறான தகவல். வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு அறுவை அரங்குகளில் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிசேரியன் செய்யப்பட்ட தாய்மார்களின் உதவியாளர்களிடம் குழந்தை பிறந்தவுடன் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்களின் குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்தி வழங்க தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்….