விருதுநகர், ஜூலை 17: விருதுநகர் கெப்பிலிங்கம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வார்டு செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த தினேஷ்குமாரை முகத்தில் காயங்களுடன் வெங்கடேஷ், சீனி, சரவணன், ஆத்தங்கரை ஆகியோர் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். டாக்டர் சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது, 4 பேரும் வார்டுக்குள் இடையூறாக இருந்துள்ளனர்.
அவர்களிடம் வார்டுக்கு வெளியே செல்லும் படி சரவணக்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சரவணக்குமாரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற காவலாளிகள் திரண்டதால் அவர்கள் சரவணக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். கிழக்கு போலீசில் சரவணக்குமார் புகாரில் வெங்கடேஷ், சீனி, சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஆத்தங்கரையை தேடி வருகின்றனர்.