திருவாரூர், செப். 26: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 சதவீதம் ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் தம்புசாமி, செயலாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், நெல்லை உலர்த்தி வழங்கிட எல்லா அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உலர் களம் வசதி என்பது பெரும்பாலும் இல்லாத உள்ளது.
இந்த காலகட்டத்தில் சூரிய ஒளியும் முழுமையாக கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 20 சதவிகிதம் ஈரப்பதம் வரையில் கொள்முதல் செய்வதற்கும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் கொள்முதல் நிலையங்களில் இருந்து ஆலைக்கு அனுப்பி வைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.