செய்யாறு, மே 13: செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க பெண் டாக்டர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த 80 வயது முதியவருக்கு சிகிச்சை அளித்தபோது, முதியவருடன் வந்த வாலிபர், பெண் டாக்டரிடம் திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் அலறி கூச்சலிட்டார். அப்போது சிகிச்சை பெற வந்திருந்தவர்கள் மற்றும் நோயாளிகளுடன் வந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து பிரம்ம தேசம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருப்பனமூரை சேர்ந்த விவசாயியான பெருமாள்(30) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வெம்பாக்கம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் சுரேஷ்பாபு கொடுத்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிந்து பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.