ஊட்டி, ஜூன் 19: ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 4000 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். சிப்ட் முறைகளில் கல்லூரி நடக்கும் நிலையில், எந்நேரமும் மாணவ, மாணவிகள் வந்து செல்வது வழக்கம். கல்லூரிக்கு சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கோத்தகிரி சாலை வழியாகவும், குன்னூர் சாலை வழியாகவும் செல்லும் வழித்தடம் உள்ளது. இவ்விரு வழித்தடங்களும் கல்லூரிவரை செல்கிறது. இந்நிலையில், கல்லூரிக்கு செல்லும் சாலையில் கோத்தகிரி சாலை சந்திப்பு முதல் கல்லூரி நுழைவு வாயில் வரை சாலையோரங்களில் இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. சில சமயங்களில் லாரிகளும் நிறுத்தப்படுகிறது. இதனால், கல்லூரி நேரங்களில் குறிப்பாக, காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் கல்லூரியை விட்டு வரும் போது பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இச்சாலையில், வாகனங்கள் ஏதேனும் வந்தால், மாணவர்கள் ஒதுங்க கூட இடமின்றி அங்குமிங்குமாக ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஊட்டி அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையோரங்களில் தனியார் வானங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.