சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தொடக்கமாக, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்ள இயலாத எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியும், எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் மாறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. சென்னை நந்தனத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்துள்ள அம்மா வளாகத்தில் உள்ள ஒரு கட்டடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டடத்திற்குத்தான் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்திற்கு கலைஞர் மாளிகை என பெயரிடப்பட்டது. அதிமுக ஆட்சி வந்தவுடன் காழ்ப்புணர்ச்சியோடு கலைஞரின் பெயரை அடியோடு அகற்றிவிட்டதை வசதியாக மறந்து விட்டு இன்றைக்கு நடைபெறாத ஒன்றிற்காக அறிக்கை விட்டு இருப்பது வெட்கக்கேடாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….