குளச்சல், ஜூன் 26 : மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மாண்டிவிளை அருகே கட்டைக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் பின்பக்கத்தில் ஒரு வாலிபர் நீண்ட நேரமாக அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்ததை கண்டனர்.அருகில் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கடியப்பட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்த சஜித் (36). என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் உடைமைகளை சோதனை செய்தபோது 45 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரிக்கையில், கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வெளிவரும்போது அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை எங்கிருந்து வாங்கினார்? கஞ்சா விற்பனையில் சஜித்துடன் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.